வரதட்சணை கொடுமை புகார் – பெண் தீக்குளித்து தற்கொலை; போலீசார் விசாரணை
ராமநாதபுரம் பெருநாழி வீரமாய்ச்சன்பட்டியை சேர்ந்த முனீஸ்வரன் (38) என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ரஞ்சிதா (31) என்பவருக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ரஞ்சிதாவிடம் வரதட்சணை கேட்டு கணவர் முனீஸ்வரன் – மாமனார் அண்ணாத்துரை ( 60) ஆகியோர் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், பாலியல் ரீதியாக மாமனார் அண்ணாத்துரை துன்புறுத்தியதாகவும் கூறி நேற்று மாலை 7 மணியளவில் வீட்டில் ரஞ்சிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.
70 சதவிகித தீக்காயங்களுடன் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா உயிரிழந்தார்.
கணவர் முனீஸ்வரன் மற்றும் மாமனார் அண்ணாதுரை ஆகியோர் வரதட்சனை கேட்டும், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும் உயிரிழந்த பெண் ரஞ்சிதா வாக்குமூலம் அளித்த வீடியோ வெளியீடு.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் பெருநாழி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் காவல்துறையின் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ரஞ்சிதாவின் குடும்பத்தினர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரதே பரிசோதனை அருகே சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.
