கமுதி புனித அந்தோணியார் ஆலயத்தில் விடிய விடிய நடந்த கறி விருந்து5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்…

கமுதி புனித அந்தோணியார் ஆலயத்தில் விடிய விடிய நடந்த கறி விருந்து
5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-மெயின்பஜாரில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித அந்தோனியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா வருடா வருடம் ஜூன் மாதம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட தேர் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றப்பட்டு, தினமும் திருப்பலி நடைபெற்றது. பின்னர் 13-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர் பவனி நடைபெற்றது. இதில் அந்தோணியார் தெரு, சவேரியார் தெரு பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.பின்னர் விழாவின் கடைசி நாளான நேற்று முன்தினம் காலை திருப்பலி நடைபெற்று, அதன் பிறகு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.பின்னர் இரவு கூட்டு பிராத்தனை
நடந்த பின்பு கர்த்தநாதர் சுவாமி நினைவு அசன வைபவம் நடைபெற்றது.


இந்த ஆலயத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆலய பங்கு தந்தையாக இருந்தவர் கர்த்தநாதர். இவர் இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்காகவும், பொதுமக்களுக்கு மருத்துவ நன்மையும் செய்துள்ளார்.அவர் மறைந்து இந்த ஆலய வளாகத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு, வருடா வருடம் புனித அந்தோனியார் தேர் பவனி முடிந்த கடைசி நாளன்று அவருக்கு நன்றி செலுத்தும் வகையில், வெள்ளாட்டு கிடாய்கள் பலியிடப்பட்டு பொது அசன அன்னதானம் நடைபெறுவது வழக்கம். அதன்படி புனித அந்தோனியார் ஆலய பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த 32 ஆட்டுக்கிடாய்கள் கர்த்தநாதர் சுவாமி நினைவிடம் முன்பு பலியிடப்பட்டு 600 கிலோ கறி 5 அண்டாக்களில் சமைக்கப்பட்டு, 1000 கிலோ அரிசி சாதம் சமைக்கப்பட்டு,கர்த்தநாதர் முன்பு படைக்கப்பட்டு பொது மக்களுக்கு அசன அன்னதானம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நேற்று அதிகாலை 3 மணி வரை விடிய விடிய கறி விருந்து நடைபெற்றது. மேலும் இந்த அன்னதானத்தில் குழந்தை இல்லாதவர்கள் அசன விருந்து சாப்பிடுபவர்களிடம்
மடியேந்தி கறிசாதத்தை பெற்று, அதனை சாப்பிடுவார்கள். இவ்வாறு செய்தால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த கறி விருந்தில் கமுதி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அனைத்து மதத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டனர். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின்முறையினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்