பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள் நல மையத்தில் பயின்று வரும் 18,802 குழந்தைகளுக்கு பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் வழங்கும் பணியினை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குழந்தைகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அருணகிரிமங்கலம் குழந்தைகள் மையத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் , மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., தலைமையில் பள்ளிச் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களை குழந்தைகளுக்கு இன்று (10.06.2025) வழங்கி துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை எளிய அடித்தட்டு மக்களின் கல்வி நலனை கருத்தில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். அதன் ஒரு பகுதியாக சமூக நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் குழந்தைகள் மையத்தில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வியை வழங்கி வருவதோடு, அவர்களின் ஊட்டச்சத்தையும் பேணி காக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது.மேலும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் முன்பருவ கல்விக்கு குழந்தைகள் மையங்களில் பதிவு செய்யும் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 490 குழந்தைகள் மையங்களில் பயிலும் 18,804 குழந்தைகளுக்கு 1 குழந்தைக்கு 2 சீருடைகள் என்ற அடிப்படையில் 37,608 சீருடைகள் வழங்கும் பணியினை தொடங்கி வைத்திடும் விதமாக இன்று ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அருணகிரிமங்கலம் குழந்தைகள் மையத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சு.தேவநாதன், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் பெருந்தலைவர் ந. கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர் வீ. ஜெகதீசன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபால், பிரேமலதா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் (பொ) சாஹிரா பானு, வட்டாரக் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்(பொ) க.பூமா, பிற துறை அலுவலர்கள் குழந்தைகள் நல பணியாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

