கடலாடி அரசுபள்ளியில் முதுகலை ஆசிரியர்கள் நியமிக்க கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை வணிகவியல் ஆசிரியர் மற்றும் முதுகலைபொருளியல் ஆசிரியர் பணியிடம் இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதால் தேர்ச்சி விகிதம் குறையும் அபாயம் உள்ளது.
கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள்செயல்படுகிறது.சுமார் 700 மாணவர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து கல்வி பயில்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 33 ஆசிரியர்கள் உள்ளனர்.
இந்நிலையில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கான முதுகலை வணிகவியல் மற்றும் பொருளியல் ஆசிரியர் இரண்டு பணியிடம் காலியாக உள்ளது. இது குறித்து
மாணவர்களின் பெற்றோர் கூறியதாவது:
கடந்த ஜூன் 2 முதல் பள்ளி திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளியில் வணிகவியல், பொருளியல்பாடத்திற்கான ஆசிரியர்கள் பணியிடம் அனுமதி இருந்தும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. வரக்கூடிய ஆசிரியர்கள் கலந்தாய்வில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.ஆசிரியர்கள் இல்லாமல் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மேலும் பள்ளியின் தரைத்தளங்கள் சேதமடைந்தும், கழிப்பறை வசதி குறைவாக உள்ளதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பெரும்பாலான வகுப்பறைகளில் மின்சார வசதி இல்லை.
எனவேஇந்த குறைகளை நிவர்த்தி செய்ய கல்வித்துறை அதிகாரிகள் முன்வந்து தீர்ந்து வைக்கவேண்டும் என்றனர்.
