தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ரூ.3,500 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும்விழா – சேலத்தில் தொடக்கம்.

பெரம்பலூர் மாவட்டம்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ரூ.3,500 கோடி வங்கிக்கடன் இணைப்புகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வினை இன்று (16.09.2025) சேலத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேரலை நிகழ்வாக கண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 385 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 4,794 மகளிர் உறுப்பினர்களுக்கு ரூ,41.86 கோடி மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்புக்கான ஆணைகளையும், அடையாள அட்டைகளையும் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி,இ.ஆ.ப., முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் வழங்கினார்.

இந்தியாவிலேயே, முதல் முறையாக, முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 1989 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக, மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கி கடனுதவி வழங்கினார்கள். அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் வருடந்தோறும் மகளிர் சுயஉதவிக்குழு தினம் என்ற நாளை அறிவித்து, அந்நாளில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் இணைப்புக்கான ஆணைகள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.
இதனால், மகளிர் சுய குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது சமூக, பொருளாதார மேம்பாட்டை அடைந்துள்ளது. மேலும், மகளிரைக் கொண்டு, சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டமைப்புகளை உருவாக்கி, முறையான பயிற்சிகள் வழங்கி, வருமானம் ஈட்டும் தொழில் தொடங்க வங்கிக் கடன் இணைப்புகள் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார திட்டம் மூலமாக வழங்கப்படுகிறது. தற்போது நலிவுற்றோரை ஒருங்கிணைத்து, சிறப்புக் குழுக்களும், மாற்றுத்திறனாளிகள் குழுக்கள் மற்றும் முதியோர்களைக் கொண்ட மதி குழுக்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
மகளிர் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் பெறவும், சுயமாக தொழில் செய்து வாழ்வில் முன்னேறவும் செயல்படுத்தப்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏராளமான மகளிர் பயன்பெற்றுள்ளனர். தமிழ்நாடு துணை முதலமைச்சர் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் சென்றபோது, மகளிர் சுயஉதவிக்குழுவினர் அரசு அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவது போன்று சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என கோரிக்கை வைத்ததையடுத்து, அவர்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் 385 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 4,794 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.41.86 கோடி மதிப்பிலான சுய உதவி குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்புக்கான ஆணைகளையும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கான வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நதி, வட்டார வணிக வள மைய கடன், சுய வேலைவாய்ப்பு திட்ட சுய உதவி குழுக்களுக்கான வங்கி கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகளையும், அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி முன்னிலையில், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.

முன்னதாக மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகளை அனைவரும் பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், மகளிர் திட்ட இயக்குநர் ர.கோபாலகிருஷ்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் ஆதவன் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்