“உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வுசெய்தார்

பெரம்பலூர் மாவட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட நெய்க்குப்பை, பிம்பலூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு நெய்க்குப்பை அரசு உயர்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட வரகுபாடி, கொட்டரை, குரும்பாபாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வரகுபாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும்நடைபெற்றது.
இதில் நெய்க்குப்பை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்து, மனு அளிக்க வருகை தந்த பொதுமக்களிடம் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்களில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண்மைத்துறை, இ-சேவை மையம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம், தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட 15 அரசுத்துறைகள் பங்கேற்று 46 சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கிட ஏதுவாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று பொதுமக்கள் அளித்துள்ள மனுக்கள் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளும், தொடர்புடைய துறைகளுக்கு செல்வது தொடர்பாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக வழிகாட்டிடவும், பெறப்படும் மனுக்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
பின்னர், இன்று பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணும் வகையில் பயனாளிகளுக்கு பட்டா மாற்றத்திற்கான ஆணை, உழவர் பாதுகாப்பு அட்டை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வுகளில் அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், சமூகப்பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.