நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.38 லட்சம் – கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனை…!

பெரம்பலூர் மாவட்டம்.
நடப்பாண்டு தீபாவளி விற்பனை இலக்கு ரூ.38 லட்சம் – கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு விற்பனையினை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., தகவல்.

பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இ.ஆ.ப., குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 90 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்புத்தள்ளுபடி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், சேலம், ஆரணி, திருபுவனம் போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், கூறைநாடு புடவைகள் மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், லினன் புடவைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள், மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024ல் ரூ.31.14 இலட்சங்கள் விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2025க்கு ரூ.38.00 லட்சங்கள் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், “கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 12 வது மாத சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் துணிகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோ-ஆப்டெக்ஸில் மின் வணிக விற்பனையும் நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்கள் www.cooptex.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விருப்பத்திற்கேற்ப இரகங்களை தேர்வு செய்து கொள்ளலாம், இவ்வாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ஜெ.நாகராஜன், மேலாளர், (உற்பத்தி மற்றும் பகிர்மானம்) கோபி, வட்டாட்சிடயர் பாலசுப்பிரமணியன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ரேகா மற்றும் அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்