கமுதியில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழாமின்னொளி அலங்காரத்துடன் விடிய விடிய நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-சாயல்குடி மெயின்பஜாரில்
350 ஆண்டுகள் பழமை வாய்ந்த பதுவை புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடா வருடம் ஜூன் மாதம் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.இந்த வருட ஆலயத் திருவிழா கடந்த
2-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இதில் அந்தோணியார் தெரு மற்றும் சவேரியார் தெரு பகுதியில் உள்ள கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு தேர்த்திருவிழா நடைபெற்றது. முன்னதாக விசேஷ திருப்பலி நடைபெற்றது. இதற்கு கமுதி முன்னாள் பங்கு தந்தை ரெய்மன்ட்ஜோசப் தலைமை தாங்கி நடத்தினார். கமுதி பங்குத் தந்தை அம்புரோஸ்லூயிஸ் மற்றும் கே.எம்.கோட்டை அருட்பணி சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து பிரத்யோகமாக செய்ய நான்கு தேர்களில் மின்னொளி மற்றும் மலர் மாலை அலங்காரத்துடன் புனித அந்தோணியார், புனித செபஸ்தியார், புனித மிக்கேல் சம்மனசு, புனித சவேரியார் உள்ளிட்ட நான்கு சிலைகளும் வைக்கப்பட்டு, ஆலயத்தில் இருந்து முக்கிய வீதிகளான நாடார் பஜார், முஸ்லீம் பஜார், செட்டியார் பஜார் வழியாக ட்ரம்செட் மற்றும் மேளதாளம், வான வேடிக்கைகளோடு இந்த தேர்பவனி நடைபெற்றது.
இந்த தேர் பவனியில், வழிநெடுகிலும் அனைத்து மதத்தினரும் மாலை, பொரிகடலை, உப்பு மற்றும் மெழுகுவர்த்தி படைத்து அந்தோணியாரை வணங்கினர். பிரசாதமாக உப்பு கலந்த பொரிகடலை வழங்கப்பட்டது. மேலும் சிறு குழந்தைகளை புனித அந்தோணியாரின் பாதத்தில் வைத்து ஆசி பெற்றனர். இந்தத் திருவிழாவில் அந்தோணியார் தெரு,
சவேரியார் தெரு மற்றும் சென்னை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கமுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்துவர்கள் உட்பட
2000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விடிய விடிய நடைபெற்ற இந்த தேர்பவனி அதிகாலை ஆலயத்தை வந்தடைந்தது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பரத உறவின் முறையினர் செய்திருந்தனர்.
