பெரம்பலூர் மாவட்டம்மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள் எடுத்த சீரிய நடவடிக்கையினால் மலேசியாவில் இறந்த வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ரமேஷ் அவர்களின் உடல் மூன்று நாட்களில் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து, குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு மனம் உருகி நன்றி தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் காமராஜர் நகர் வடக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த திரு.ரமேஷ் என்பவர் மலேசியா நாட்டில் சிலான்கூர் என்ற இடத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்தார் என்றும், கடந்த 02.08.2025 அன்று மதியம் இறந்துவிட்டதாகவும், தனது கணவரின் உடலை கொண்டு வருவதற்கு 5 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாகவும், தனது கணவரின் வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்துவதாகவும், வறுமையான நிலையில் அவ்வளவு பணம் இல்லை எனவே, தனது கணவர் உடலை மீட்டு இந்தியா கொண்டுவருமாறு அவரின் மனைவி திருமதி காவேரி என்பவர், கடந்த 03.08.2025 அன்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்களிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து, 04.05.2025 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடமும் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை துறை அமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க, பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ.ப., அவர்கள் 04.08.2025 அன்று அயல்நாட்டினர் துறையின் அரசு செயலாளர் அவர்களுக்கும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் அவர்களுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அதனடிப்படையில், தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கை எடுத்ததால், திரு.ரமேஷ் அவர்களின் உடல் மீட்கப்பட்டு மலேசியா நாட்டில் இருந்து இந்தியா கொண்டு வந்து, 07.08.2025 இன்று அதிகாலை குன்னத்திற்கு கொண்டுவரப்பட்டது.
இறந்த திரு.ரமேஷ் அவர்களுக்கு திருமதி காவேரி என்ற மனைவியும், 19 வயதில் செல்வி ஆனந்தி என்ற மகளும், 16 வயதில் திரு.சக்திதாசன் என்ற மகனும், உள்ளனர். இவரின் தந்தை திரு.சீதாராமன் மற்றும் தாய் திருமதி செல்லம்மாள் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். மிக வறிய நிலையில் உள்ள குடும்பமாகும்.
மேலும், கோரிக்கை வைத்த மூன்றே நாளுக்குள் திரு.ரமேஷ் அவர்களின் உடலை மீட்டுத்தர நடவடிக்கை எடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் அனைவரும் மனம் உருகி நன்றி தெரிவித்தனர்.
